குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம்: பாஜகவின் திட்டம் என்ன?

சுதந்திர இந்தியாவுக்கு அடித்தளமிட்ட முன்னோடிகள் கொண்டிருந்த தொலைநோக்கு சிந்தனைக்கு முரண்பட்டதாக குடியுரிமை (திருத்த) சட்ட மசோதா இருக்கிறது என்று கூறினால் அது மிகையானதாக இருக்காது.
மக்களவையில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை (திருத்த) சட்ட மசோதா, இதுவரை அமலில் இருந்த குடியுரிமை சட்ட மசோதா 1955-க்கு மாற்றாக அமைகிறது. துயரமிக்க பிரிவினை மற்றும் பெருமளவிலான, மக்கள் இந்தியாவுக்கு வந்து குடியேறிய பின்னணியில் அப்போது அந்தச் சட்டம் உருவாக்கப்பட்டது.
குடிபெயர்ந்து வருவது இன்னும் முடிந்துவிடவில்லை. மதச்சார்பற்ற ஜனநாயக நாடாக இருக்க இந்தியா முடிவு செய்த நிலையில், பாகிஸ்தான் 1956ல் இஸ்லாமியக் குடியரசாக மாறியது. அப்போது முதன்முதலில் அவ்வாறு மாறியது பாகிஸ்தானாக தான் இருக்கும்.
பாகிஸ்தானை உருவாக்கிய முகமது அலி ஜின்னா கூறிய எச்சரிக்கைகள் அனைத்தையும் காற்றில் பறக்கவிட்டு தான் இந்த அறிவிக்கையை பாகிஸ்தான் செய்தது. அவர் 1948ல் காலமாகிவிட்டார்.
மதசார்பு நாடாக பாகிஸ்தானின் அரசு தீவிர செயல்பாடுகள் காட்டிய நிலையில், முஸ்லிம் அல்லாதவர்கள், குறிப்பாக இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் துன்பங்கள் அதிகரித்தன. மத அடிப்படையில் துன்புறுத்தல்கள் அதிகமானதால் பெருமளவிலான முஸ்லிம் அல்லாதவர்கள் அருகில் உள்ள இந்தியாவுக்கு குடிபெயர்ந்தனர். இதனால் அங்கு முஸ்லிம் அல்லாதவர்களின் மக்கள் தொகை 2 சதவீதத்துக்கும் கீழாகக் குறைந்துவிட்டது. பிரிவினைக்குப் பிறகு சுமார் 4.7 மில்லியன் இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் இந்தியாவுக்கு வந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
குடியுரிமை சட்டத் திருத்த மசோதா: பாஜகவின் திட்டம் என்ன?படத்தின் காப்புரிமைGETTY IMAGES
தங்களை ஏற்றுக் கொண்ட நாட்டில், தங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லாவிட்டாலும், எந்த நாட்டையும் சாராத அகதிகளாக வாழும் அந்த மக்களின் கோரிக்கைகளை ஏற்க வேண்டும் என்பதற்காக குடியுரிமைச் சட்டம் 1955 உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
மதச்சார்பற்ற நாடு என்ற அடிப்படையை வலியுறுத்தும் நிலையில், எந்த மதத்தவராக இருந்தாலும் பாகுபாடு காட்டாமல் அவர்களை ஏற்றுக் கொள்வது தான் எழுத்திலும், எண்ணத்திலும் கொள்கையை பின்பற்றுவதாக இருந்தது.
நீண்டகாலம் நிலுவையில் இருந்த கோரிக்கையைப் பூர்த்தி செய்யும் வகையில் குடியுரிமை (திருத்த) சட்ட மசோதா நிறைவேற்றப் பட்டுள்ளது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேச நாடுகளில் இருந்து குடிபெயர்ந்து வந்துள்ள இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தவர்கள், ஜெயின்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்கள்,
இந்தியக் குடியுரிமை பெறத் தகுதியுள்ளவர்கள் என்பது இந்த மசோதாவின் சிறப்பம்சம். முதலில் உருவாக்கப்பட்ட குடியுரிமை சட்டத்தின்படி கடந்த 12 மாத காலம் தொடர்ச்சியாகவும், கடந்த 12 ஆண்டுகளில் 11 ஆண்டுகளும் இந்தியாவில் வாழ்ந்திருந்தால் இந்தத் தகுதி உண்டு என கூறப்பட்டுள்ளது. புதிய திருத்த சட்ட மசோதாவின்படி, இந்த காலக் கெடு ஆறு ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டு, மசோதாவில் குறிப்பிட்டுள்ள நாடுகளில் இருந்து வந்துள்ள, மேற்படி மதத்தவர்களுக்கு இந்தத் தகுதி உண்டு என கூறப்பட்டுள்ளது.

  •    குடியுரிமை சட்டத் திருத்த மசோதா: மாநிலங்களவையில் நிறைவேற்றம்
  •   குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக அசாம் போராடுவது ஏன்? 
மசோதாவில் குறிப்பிட்டுள்ள நாடுகளில், மதத்தின் அடிப்படையில் துன்புறுத்தலுக்கு ஆளாகும் வருத்தமான உண்மை நிலையை மசோதா கருத்தில் எடுத்துக் கொண்டுள்ளது. மத அடிப்படையில் துன்புறுத்தலுக்கு ஆளாவது என்பதும், அதுபோன்ற துன்புறுத்தல் இல்லாமல் வெளியேறியவர்களுக்கும் வித்தியாசம் உள்ளது. இதன் அடிப்படையில் ரோஹிங்யா முஸ்லிம்களையும் இதில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படவில்லை.
மியான்மரில் ஆட்சியில் உள்ள அரசுடன் ரோஹிங்யா மக்களுக்கு மோதல் உள்ளது. அரசுக்கு எதிரான சண்டை காரணமாக பெருமளவில் அருகில் உள்ள வங்கதேசத்துக்குச் சென்றுள்ளனர். மியான்மருக்கும் வங்கதேசத்துக்கும் இடையிலான இருதரப்பு பிரச்சினை இந்தியாவுக்கும் பரவியது. இதுபோன்ற தேவைகளின் போது, அவர்கள் எந்த நாட்டுக்கு உரியவர்களோ அங்கேயே மறுகுடியமர்வு செய்வதன் மூலம் இதற்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.
மத அடிப்படையில் துன்புறுத்தலுக்கு ஆளாகி குடிபெயர்ந்தவர்கள் மற்றும் அரசியல் அமைதியின்மை அல்லது அதுபோன்ற காரணங்களால் குடிபெயர்ந்து வந்தவர்களுக்கு இடையில் இந்த மசோதா தெளிவாக வித்தியாசத்தைக் குறிப்பிட்டுள்ளது.
தமிழகத்தில் ஏராளமான முகாம்களில் 2008-09 மற்றும் இருபது ஆண்டுகளுக்கும் முன்பிருந்தே குடியிருக்கும் இலங்கைத் தமிழர்களை, இலங்கையில் விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்துக்குப் பயந்து, தப்பி வந்து இங்கு வாழும் அகதிகளை இந்த மசோதா கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்ற வாதம் இதன் மூலம் அடிபட்டுப் போகிறது. இருந்தபோதிலும், இந்த மசோதாவின் நுணுக்கமான அம்சங்கள் குறித்து கூடிய சீக்கிரம் அரசு இன்னும் விளக்கங்கள் அளிப்பது நல்லதாக இருக்கும்.
அதேபோல, இந்த மசோதா முஸ்லிம்களுக்கு எதிரானது என்ற குற்றச்சாட்டை முறியடிக்க தீவிரப் பிரச்சாரங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்தியக் குடிமக்களுக்கு உரிய அனைத்து அடிப்படை உரிமைகளையும் அனுபவித்து வரும் மில்லியன் கணக்கான முஸ்லிம்கள் பற்றி இந்த மசோதாவில் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை.
சூழ்நிலையை கெடுக்கும் உள்நோக்கத்துடன், வாக்கு வங்கியை மனதில் கொண்டு அரசியல் கண்ணோட்டத்தில் இந்த எதிர்ப்புப் பிரச்சாரம் நடைபெறுகிறது. இந்தப் பிரச்சாரம் பெரிய பிரச்சினையாக மாறுவதற்கு முன்னதாக அரசு அவசரமாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது.
இந்திய அரசியல் சட்டத்தின் 14வது பிரிவை மீறும் வகையில் இந்த மசோதா உள்ளது என்று கூறுவதும் அடிப்படையற்றது. உண்மையில், இதுவரையில் அவர்களுக்கு மறுக்கப்பட்டு வந்த அனைத்து உரிமைகளையும் இனிமேல் பெறுவதற்கு இந்த மசோதா வகை செய்கிறது.
கடல்கடந்து வாழும் இந்திய குடிமக்கள் (ஓ.சி.ஐ.) அட்டை வைத்திருப்பவர்களுக்கான வசதிகளில் மாற்றம் செய்யவும் இந்த மசோதா வகை செய்கிறது. இந்தியாவை பூர்விகமாகக் கொண்டவர்கள் (உதாரணமாக இந்தியாவின் முன்னாள் குடிமகனாக இருந்தவர் அல்லது அவர்களின் வாரிசுகளாக உள்ளவர்கள்) அல்லது இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்டவரை திருமணம் செய்து கொண்டவர், வெளிநாடுகளில் வசிக்கும் நிலையில், 1955 சட்டத்தின் கீழ், ஓ.சி.ஐ. அட்டைக்குப் பதிவு செய்து கொள்ளலாம். இந்தியாவுக்குப் பயணம் வருவது மற்றும் இங்கு கல்வி பயில்வது, வேலை பார்ப்பது போன்ற பயன்களைப் பெறுவதற்கான தகுதியை இது அளிக்கும்.
புதிய மசோதாவின்படி, இந்த விதிமுறை உள்நாட்டில் கட்டுப்பாட்டு வரம்பு (ஐ.எல்.பி.) அமலில் உள்ள அருணாச்சலப்பிரதேசம், மிசோரம், நாகலாந்து மாநிலங்களுக்கும், அசாம், மேகாலயா, மிசோரம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் (அரசியல் சட்டத்தின் 6வது அட்டவணையில் குறிப்பிட்டுள்ளவாறு) உள்ள மலைவாழ் பகுதிகளுக்கும் பொருந்தாது என்றும் கூறப்பட்டுள்ளது. ஐ.எல்.பி. வரையறையின் கீழ், அந்தப் பகுதிகளில் இந்தியக் குடிமக்கள் நிலம் அல்லது சொத்துகள் வாங்கி மற்றும் / அல்லது வேலையில் ஈடுபடுவதன் மூலம் அங்கே குடியேற முடியாது.
(கோப்புப்படம்)படத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image caption(கோப்புப்படம்)
எனவே, ``புதிய குடிமக்களுக்கு'' இந்த விதிமுறைகளில் இருந்து விலக்கு அளிக்கப்படாது என்று சொல்ல வேண்டியதில்லை. ஐ.எல்.பி. வரம்புக்கு உள்பட்ட பகுதிகளில் புதிய குடிமக்கள் குவிந்துவிடாமல் தடுக்க இது உதவியாக இருக்கும். பிரிட்டிஷ் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட ஐ.எல்.பி. என்பதையே மறு ஆய்வு செய்து, பொருளாதார மேம்பாடு மற்றும் வாய்ப்புகளுக்கு ஏற்ப மாற்றி அமைக்க வேண்டும் என்ற வாதங்களும் உள்ளன.
அசாமில் மலைவாழ் மக்கள் அல்லாத பகுதிகளும் இந்த மசோதாவின் வரம்பிற்குள் வருகின்றன. இந்த மசோதா காரணமாக ``சட்டவிரோத'' குடிபெயர்வு மக்கள், குறிப்பாக வங்கதேசத்தவர்கள் அதிகாரப்பூர்வமாக தங்கள் மாநிலத்தில் குடியேறிவிடுவார்கள் என்று அப் பகுதி மக்களுக்கு எற்பட்டுள்ளது. இதை கவனத்தில் கொண்டு, துரிதமாகத் தீர்வு காண வேண்டியுள்ளது.
அசாமில் பெரும்பாலான பகுதிகளில், குறிப்பாக வேளாண்மை அதிகம் நடைபெறும், தேயிலைத் தோட்டங்கள் உள்ள பகுதிகளில், இதன் காரணமாகத் தான் அதிக எதிர்ப்பு காணப்படுகிறது. ஏற்கெனவே அந்தப் பகுதிகளில் வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக வந்துள்ளவர்களால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த மக்கள் கருதுகிறார்கள்.
1971 ஆம் ஆண்டு வங்கதேசம் விடுதலை பெற்ற போது, பாகிஸ்தான் ராணுவத்தினரின் கொடுமைகளுக்கு ஆளாகி பெருமளவிலான இந்துக்கள் இந்தியாவுக்கு வந்து குவிந்தனர். இந்துக்களை தஞ்சம் நாடி வந்தவர்கள் என்றும், சட்டவிரோதமாக குடியேறியவர்களை - பெரும்பாலும் முஸ்லிம்கள் - வெளிநாட்டவர்கள் என்றும் வகைப்படுத்த முயற்சி நடைபெற்றது.
மாறி வரும் சமூகப் பின்னணி மற்றும் புவியியல் சார்ந்த அரசியல் சூழ்நிலைகள் பற்றி இந்தியாவில் உள்ள அரசியல் கட்சியினர் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இந்த மசோதாவை தேசியப் பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான கண்ணோட்டத்துடன் அணுக வேண்டியதும் அவசியம். தாங்கள் வாழ்ந்த அல்லது பிறந்த நாட்டில், மத தீவிரவாதம் மற்றும் சமூக வேறுபாடுகள் காரணமாக, வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டு குடிபெயர்ந்து வந்த மக்கள், இனிமேல் `அகதிகள்' என்ற முத்திரையுடன் அவலங்களுக்கு ஆளாகாமல் வாழ முடியும் சூழ்நிலை இதன் மூலம் கிடைத்துள்ளது.
அனைத்து அரசியல் கட்சிகளும் குறுகிய மனப்பான்மையைக் கைவிட்டு, பிரிவினையின் போது நிகழ்ந்த தவறுகள் சரி செய்யப்பட்டு, புதிய தவறுகள் நிகழ்ந்துவிடாத வகையில் குடியுரிமை குறித்து விரிவான விவாதம் நடத்த முன்வர வேண்டும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

Source:BBC/Tamil

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !