1.காணி நிலம் வேண்டும்

 1.காணி நிலம் வேண்டும்

காணி நிலம் வேண்டும் - பராசக்தி

காணி நிலம் வேண்டும், - அங்கு

தூணில் அழகியதாய் - நன்மாடங்கள்

துய்ய நிறத்தினதாய் - அந்தக்

காணி நிலத்தினிடையே - ஓர்மாளிகை

கட்டித் தரவேண்டும் - அங்கு

கேணியருகினிலே - தென்னைமரம்

கீற்று மிளநீரும்.


பத்துப் பன்னிரண்டு - தென்னைமரம்

பக்கத்திலே வேணும் - நல்ல

முத்துச் சுடர்போலே - நிலாவொளி

முன்பு வரவேணும், அங்கு

கத்துங் குயிலோசை - சற்றே வந்து

காதிற் படவேணும், - என்றன்

சித்தம் மகிழ்ந்திடவே - நன்றாயிளந்

தென்றல் வரவேணும்.


பாட்டுக் கலந்திடவே - அங்கேயொரு

பத்தினிப் பெண்வேணும் - எங்கள்

கூட்டுக் களியினிலே - கவிதைகள்

கொண்டுதர வேணும் - அந்தக்

காட்டு வெளியினிலே - அம்மா! நின்றன்

காவலுற வேணும், - என்றன்

பாட்டுத் திறத்தாலே - இவ்வையத்தைப்

பாலித்திட வேணும்.

2.நல்லதோர் வீணை

ஆசிரியர் : மகாகவி பாரதியார்.

நல்லதோர் வீணை செய்தே - அதை

நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?

சொல்லடி சிவசக்தி - எனைச்

சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்.

வல்லமை தாராயோ, - இந்த

மாநிலம் பயனுற வாழ்வதற்கே?

சொல்லடி, சிவசக்தி - நிலச்

சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?


விசையுறு பந்தினைப்போல் - உள்ளம்

வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்,

நசையறு மனங்கேட்டேன் - நித்தம்

நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,

தசையினைத் தீசுடினும் - சிவ

சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்,

அசைவறு மதிகேட்டேன் - இவை

அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?


#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !